தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம். இது கூட்டணி அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து பயணிப்போம்” என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு அமைய வேண்டும் என்பதே அவசியம்.
அதிமுக – பாஜக கூட்டணியை தோற்கடிக்கவே திமுகவுடன் கூட்டணி வைத்தோம். தற்போது அது நடந்துள்ளது. பாஜக ஓர் இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. ஆளுநர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். திருமாவளவன் மற்றொரு கூட்டத்தில் இருக்கிறார். நாங்கள் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
10-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிடில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம்

கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி நடத்துவதை அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையில்தான் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னெடுப்பது, மாநில உரிமைகளை பாதுகாப்பது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என திமுக நிறைவேற்றியுள்ள திட்டங்களை, நாங்களும் திமுகவும் இணைந்துதான் நிறைவேற்றியுள்ளோம்.
அந்த வகையில் மதவெறி சக்திகளுக்கு எதிராக, ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கிறபோது, திமுகவுடன் இணைந்து மாநில உரிமைகளை பாதுகாப்பது, மதவெறிக்கு எதிராக போராடும் போராட்டம் தொடரும். அதோடு திமுகவுடனான உறவு தொடரும்.
உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம். தவெக ஆட்சி அமைக்க கூடாது என ஸ்டாலின் கூறவில்லை. தவெக ஆட்சி அமைக்கட்டும்; நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றுதான் சொன்னார். எங்களின் முடிவுக்கு திமுகவின் ஒப்புதல் தேவை இல்லை; நாங்கள் தன்னிச்சையான கட்சிகள். மதச்சார்பற்ற ஓர் அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் எங்களிடம் ஆதரவு கோரியுள்ளார்” என்றார் பெ.சண்முகம்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறும்போது, “மக்கள் முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்துள்ளோம். இனி வருங்காலங்களில் விஜய் மாநில உரிமை, மதச்சார்பின்மை ஆகியவை குறித்து குரலெழுப்ப வேண்டும். மக்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அது இடதுசாரிகளால் தடைபட்டுவிடக் கூடாது. அமித் ஷா ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு தருகிறோம். மாநில உரிமை பறிபோனால் உரத்த குரல் எழுப்புவோம்; போராடுவோம்” என்றார்.

GIPHY App Key not set. Please check settings