‘தேர்தல் நாளில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலின் விவரம்: ‘திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டுமென நம்மைவிட தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்திருப்பதாலும், மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டால் அது நேரடியாக பாஜகவுக்குச் செல்லும் என்பதாலும் திமுக கூட்டணிக்கே வாக்கு அளிப்போம் என்பதே தமிழக வாக்காளர்களின் உறுதியான முடிவாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளிலும் நமது கட்சியினர் கடுமையாக உழைக்கின்றனர். இந்த உழைப்பு வாக்குப்பதிவு நாளன்றும் (ஏப்.23) தொடர வேண்டும். இத்தனை நாட்களை விட அதிக விழிப்புடன் இன்று பணியாற்ற வேண்டும். அறிவாலயத்தில் உள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் மூலமாக உங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்படும். சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பூத் ஏஜென்ட்கள் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்குப்பதிவன்று பிஎல்ஏ-2 மற்றும் பிஎல்சி, பிடிஏ ஆகியோர் தங்கள் வாக்கை முதலில் பதிவுசெய்ய வேண்டும். அதன்பின், தங்களது பாகத்தில் உள்ள ஆதரவு, தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும், விரைந்து பதிவு செய்யவும், ஒருவர்கூட விடுபடாதபடி நிர்வாகிகள் பணிபுரிய வேண்டும். பூத் ஏஜென்ட்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்தில் தேர்தல் அலுவலர் தரும் 17-சி படிவத்தில் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பமிட்டு நகலைப் பெற வேண்டும்.

வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்த விவிபேட் ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்ய வேண்டும்.
மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜென்ட் பங்கேற்பதுடன், விவிபேட் சீட்டுகளை இவிஎம் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் ஜீரோ என்று காட்டுவதை உறுதிசெய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளை தனியாக பிங்க் கவரில் வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பமிட வேண்டும்.
வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கை இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.
வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தருணத்தில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இறுதியாக படிவம் 17-சி நகல் பெற்று அனைத்து இயந்திரங்களும் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.


GIPHY App Key not set. Please check settings