அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்கள் ’ஏழு சகோதரிகள்’ எனப்படுகின்றன.
மலைத்தொடர்கள், மழை நனைத்த காடுகள், பழங்குடியினரின் வாழ்க்கை முறை, கிளர்ந்தெழும் உணவின் மணம் அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இந்தப் பெயர்.
அந்த ஏழு சகோதரிகளில் மேகாலயத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. ‘மேகங்களின் இல்லம்’ என்று பெயர்பெற்ற இந்த மண்ணில், மலைகளின் தோள்களில் மேகங்கள் சாய்ந்து உறங்குகின்றன!
சென்னையின் வெப்பத்திலிருந்து தப்பித்து மேகாலயத்தின் குளிர்ந்த காற்றை உணர்ந்த தருணம் அப்பப்பா!
குவஹாத்தி விமான நிலையத்திலிருந்து ஐந்து மணி நேர மலைப்பயணம். மலைச்சாலைகளில் ஏறத் தொடங்கியவுடன், வழியெங்கும் பசுமை. வானம் தரையைத் தொட்டுக்கொண்டிருப்பதுபோல அடர்ந்த மூடுபனி. இடையிடையே வெள்ளை நீர்த்தாரைகள் மலைக்குன்றுகளின் நடுவே விழுந்து கொண்டிருந்தன.
ஏழு நீர்த்தாரைகள்:
அன்று மாலை சிரபுஞ்சியை அடைந்தோம். மழை எங்களை உற்சாகமாக வரவேற்றது. உலகின் மிக ஈரமான இடம் என்று பெயர் பெற்றதாயிற்றே!
நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து ‘செவன் சிஸ்டர்ஸ்’ அருவியின் (Nohsngithiang Falls) அபாரமான அழகை முழுமையாகக் காண முடிந்தது. பசுமை போர்த்திய கரும் மலைகளின் மீது வெள்ளைப் பட்டுநூல் போல ஏழு நீர்த்தாரைகள் கீழே விழுந்து கொண்டிருந்தன. இடையிடையே மூடுபனி வந்து அந்தக் காட்சியை மறைத்து விளையாட்டுக் காட்டியது.
ஏழு நீர்த்தாரைகளும் 315 மீட்டர் உயரத்திலிருந்து விழுகின்றன. அருகருகே பாய்ந்தாலும் அவை ஒன்றோடு மற்றொன்று கலப்பதில்லை. ஒவ்வொரு நீர்த்தாரை யும் தனித்த பாதையில் பயணிக்கிறது. அதைப் பார்த்த போது, ‘ஒற்றுமை என்பது ஒன்றாகக் கலந்து மறைந்து போவது அல்ல; தனித் தன்மையைக் காத்த படியே வாழ்வது’ என்கிற உண்மை புரிந்தது.




GIPHY App Key not set. Please check settings